கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி (Gummidipoondi Assembly Constituency) |
ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ள இத்தொகுதி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும், சென்னை மாவட்டம், ஆந்திரப்பிரதேச மாநிலம் ஆகியவற்றையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. கும்மிடிப்பூண்டி வட்டம் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டம் ஆகியவை இதன் பகுதிகளாக அமைந்துள்ளன. இதன் தொகுதி எண் 1. இந்தத் தொகுதியில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். வன்னியர், ஆதி திராவிடர், நாயுடு சமூக மக்கள் அதிக அளவில் இருக்கின்றனர். விவசாயம், மீன்பிடி தொழில்கள் பிரதானமாக இருக்கும் கும்மிடிப்பூண்டி, தற்போது சிப்காட் நிறைந்த தொழில் பகுதியாகவும் அறியப்படுகிறது. 1957-ல் (மதராஸ் மாகாணம்) நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கும்மிடிப்பூண்டியில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியிருந்தாலும், அடுத்தடுத்த தேர்தல்களில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளே இங்கு வெற்றி பெற்று வந்தன. 15 சட்டமன்றத் தேர்தல்களும், 1 இடைத்தேர்தலும் நடைபெற்றிருக்கிறது. அதில் அதிமுக 8 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ், தேமுதிக, சுதந்திரா கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன. 2005-ல் இங்கு வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக இருந்த அதிமுக-வைச் சேர்ந்த கே.சுதர்சனம், பவாரியா கொள்ளைக் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் கே.சுதர்சனத்தின் மகன் கே.எஸ்.விஜயகுமார், அதிமுக சார்பில் போட்டியிட்டு 83,717 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக-வைச் சேர்ந்த டி.ஜெ. கோவிந்தராஜன், 1,26,452 வாக்குகள் பெற்று தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||